சென்னை: தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம். பிரபு என்பவரும், பரவர் சமுதாயத்தின் சார்பில் என். வளன்சந்திரா என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
டாக்டர் பிரபு தாக்கல்செய்திருந்த மனுவில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் உள்ஒதுக்கீடு வழங்குவதும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வித தகவலையும் வழங்காத நிலையில் உள்ஒதுக்கீடு வழங்குவதும் விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளார்.
மீனவ கிராமங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை எடுத்துவரும் வளன்சந்திரா தாக்கல்செய்துள்ள மனுவில், அரசு மற்றும் நீதித் துறையில் போதிய இடங்களை வன்னியர்கள் பெற்றுள்ளதாகவும், சமூகத்தில் அவர்களின் நிலை, கல்வித்தகுதி ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளாமல், வன்னியர்களின் வாக்குகளை மட்டுமே கருத்தில்கொண்டு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கையும் பட்டியலிட பதிவுத் துறைக்கு அறிவுறுத்தி இரு வழக்குகளையும் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு!